விக்டோரியாவில் stage 3 கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம்(mask) அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை இரவு 11.59 முதல் மெல்பேர்ன் மற்றும் Mitchell Shire பகுதிகளில் வாழ்பவர்கள் வீட்டிற்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என Premier Daniel Andrews அறிவித்தார்.
அவ்வாறு முகக்கவசம் அணிந்துகொள்ளாமல் வெளியே செல்பவர்கள் 200 டொலர்கள் அபராதம் செலுத்த நேரிடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முகக்கவசம் அணிந்துகொள்வது சாத்தியப்படாத இடங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்துமாறு Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் மரணமடைந்துள்ளனர்.
90 வயதுகளிலுள்ள முதியவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து விக்டோரியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் விக்டோரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலை எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி இரவு 11.59 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
