விக்டோரிய மாநிலத்தில் வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துபவர்களுக்கான அபராதம் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனம் ஓட்டும் போது கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புதல், செல்ஃபி எடுத்தல், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வீடியோக்களைப் பார்வையிடுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கவென, பொலிஸார் வீதிகளின் முக்கிய சந்திகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேநேரம் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் கடமையில் ஈடுபடுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதமாக 4 demerit புள்ளிகளும் 484 டொலர்களும் தற்போது அறவிடப்படுகிறது.
இனிவரும்நாட்களில் குறித்த அபராதத்தை அதிகரிப்பதற்கு விக்டோரிய மாநில அரசு திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துபவர்களுக்கான அபராதமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 344 டொலர்களும், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் 400 டொலர்களும், டஸ்மேனியாவில் 300 டொலர்களும், தெற்கு ஆஸ்திரேலியாவில் 534 டொலர்களும் அறவிடப்படுகின்றது.
மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒருவர் தனது கைபேசியை 3 செக்கன்கள் பார்ப்பதன் மூலம் வீதியின் 50 மீட்டர்களை அவர் பார்க்கத்தவறுகிறார் எனவும் இது விபத்து ஏற்படுவதற்கு மிகவும் போதுமானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அழைப்பை ஏற்றுக்கொள்ளவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ அல்லது சமூக வலைத்தளங்களை பாவிக்கவோ நீங்கள் எக்காரணத்திற்காகவும் வாகனம் ஓட்டும் போது கைபேசியை தொடக்கூடாது.
கைபேசியை தொடாமல் Bluetooth அல்லது குரல் செயல்படுத்தல் மூலம் நீங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அச்சமயம் உங்களின் கைபேசி பாதுகாப்பான முறையில் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
சமிக்ஞை விளக்குகளில் காத்திருக்கும்போது, அல்லது வாகன நெரிசலில் நிறுத்தும்போது கைபேசியை பாவிப்பது சட்டவிரோதமானது. உங்கள் கைபேசியை நீங்கள் கையிலெடுத்துப் பயன்படுத்த விரும்பினால் உங்கள் வாகனம் போக்குவரத்து பாதையிலிருந்து விலகி சரியான இடத்தில் முற்றாக நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.
Learner, P1 மற்றும் P2 லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் வாகனம் ஓட்டும் போது முற்றிலும் கைபேசியை பாவிக்கவே கூடாது.
