இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மெல்பேர்னில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
லண்டனிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் இரண்டு சிறுமிகளுக்கு இணையவழியாக பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் லண்டன் பொலீஸாரும் FBI பிரிவினரும் ஆஸ்திரேலியா பொலீஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் 12 - 14 வயது சிறுமிகளுடன் போலி சமூகவலைத்தளக்கணக்கின் மூலம் தொடர்பினை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கைக்குரியவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட குறிப்பிட்ட இளைஞர், அந்த சிறுமிகளின் அந்தரங்கமான காணொளிகளை பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதன்பின்னர், மேலும் அவ்வாறான அந்தரங்க காணொளிகளை தனக்கு அனுப்புமாறு குறிப்பிட்ட சிறுமிகளை வற்புறுத்தினார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு அந்த சிறுமிகள் மறுத்தபோது, தான் ஏற்கனவே பெற்றுக்கொண்ட காணொளிகளை குறிப்பிட்ட சிறுமிகளின் பெற்றோர் - உறவினர் - நண்பர்கள் ஆகியோரிடம் பகிர்ந்து அவர்களது வாழ்க்கையை சீரழிக்கப்போவதாக மிரட்டினார் என்றும் கூறப்படுகிறது.
இந்த மிரட்டலுக்கும் சிறுமிகள் பணியாதபோது, சொன்னபடி குறிப்பிட்ட சிறுமிகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்புகொண்டு அவரிடமிருந்த அந்தரங்கமான சிறுமிகளின் காணொளிகளை பகிர்ந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குற்றங்கள் தொடர்பாக லண்டன் பொலீஸாரும் FBI தரப்பினரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட இலங்கை இளைஞரின் முகவரியை கண்டுபிடித்த ஆஸ்திரேலிய பொலீஸார், மெல்பேர்னில் Burwood பகுதியிலுள்ள வீட்டை கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டிருந்தனர்.
இந்த சோதனையின்போது மீட்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் குறிப்பிட்ட இளைஞர் கைதுசெய்யப்பட்டு, நேற்றையதினம் மெல்பேர்ன் மாஜிஸ்ரேட் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவர் 19 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25).
