ஆஸ்திரேலிய முதியோர் இல்லங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மற்றும் தற்காலிக விசாவுள்ளவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவி வழங்கப்படவேண்டிய தேவை அதிகரித்துள்ளதாக தொழிலாளர் நலனாய்வு ஆணையகம் தெரிவித்துள்ளது.
2011 ஆம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலிய முதியோர் இல்லங்களில் பணிபுரிபவர்களில் 33 சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2016 இல் அந்த தொகை 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு தங்களது தற்காலிக விசா சிக்கல்கள் காரணமாகவும், வேலை கிடைப்பதற்காக தொழில்நிறுவனங்களில் தங்கியிருக்கும் நோக்கத்துடனும் முதியோர் இல்லங்களில் பணிபுரிவர்கள் பல்வேறு வகைகளிலும் ஒரு பொறியில் மாட்டியவர்களாக உள்ளனர் என்றும் இவர்களது விசா பலவீனங்களை காரணமாக வைத்து தொழில்நிறுவனங்கள் சம்பளத்தை சுரண்டுகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள தொழிலாளர் நலனாய்வு ஆணையகம் - முறையான பயிற்சிகள் வழங்கப்படாமலும்கூட பலர் இப்பராமரிப்பு தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முக்கியமாக வெளிநாட்டு மாணவர்கள் இந்த துறையில் பெருந்தொகையான எண்ணிக்கையில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கும்கூட உதவி தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய முதியோர் இல்லங்களில் பணிபுரிபவர்களின் தேவை இப்போதுள்ளதைவிட 2050 ஆம் ஆண்டு மூன்று மடங்காக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிவையில், இந்த துறையில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களும் அவர்களுக்கான கூடுதல் உதவியும் அத்தியாசியமாகியுள்ளது- என்று கூறியுள்ளது.
