நிலவில் மனிதன் தரையிறங்கிய பொன் விழா நினைவு நாளை முன்னிட்டு மெல்பேர்னில் நடைபெறவுள்ள ஏலத்தில் சோவியத் ஒன்றியம் 50 வருடங்களுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பிய விண்கலத்தின் மூலம் பூமிக்கு கொண்டுவரப்பட்ட நிலவுத்தூசி ஏலமிடப்படவுள்ளது.
சோவியத் ஒன்றியத்திலிருந்து 80-களில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த விஞ்ஞானி ஒருவரிடமுள்ள இந்த 0.4 கிராம் நிலவுத்தூசி சுமார் 500 ஆயிரம் முதல் 750 ஆயிரம் டொலர்கள் வரை ஏலம் கூறப்பட்டு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்பேர்னில் நடைபெறுகின்ற "Leski Auctions" எனப்படும் பிரபலமான ஏலத்தில் நாளை டிசெம்பர் 11 ஆம் திகதி இந்த நிலவுத்தூசி ஏலமிடப்படவுள்ளது.
சோவியத் ஒன்றியம் வல்லரசாகவிருந்த சமயம் நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தினை அனுப்பி பூமிக்கு தருவிக்கப்பட்ட 100 கிராம் நிலவுத்தூசியில் ஒரு கிராமை தனது ஆராய்ச்சிக்காக பெற்றுக்கொண்ட குறிப்பிட்ட வானியல் விஞ்ஞானி, 0.6 கிராமை தனது ஆராய்ச்சிக்காக பயன்படுத்திவிட்டு மிகுதியை கடந்த 30 வருடங்களாக பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.
தங்கப்பேழையில் பாதுகாத்துவரும் இந்த தூசியை இனிமேலும் தான் வைத்திருப்பதில் பயனில்லை என்றும் தனக்கு எண்பது வயதாவதால் இந்த தூசியை ஏலத்தில் விற்று, அந்தப்பணத்தை குடும்பத்தினருக்கு கொடுப்பதற்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கப்படும் விலைக்கு இந்த நிலவுத்தூசி ஏலத்தில் வாங்கப்பட்டால், எடையின் அடிப்படையில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ஒரு கிராம் வைரம் 55 ஆயிரம் டொலர்கள் என்றும் ஒரு கிராம் புளுட்டோனியம் நாலாயிரம் டொலர்கள் என்றும் சந்தை விலைகள் காணப்படுகையில், 0.4 கிராம் நிலவுத்தூசி 750 ஆயிரம் டொலர்களளுக்கு விற்கப்பட்டால் அது மிகப்பெரிய ஏலச்சாதனையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
