நேபாளத்தில் கிறஸ்தவ மதத்தை பரப்பி அங்குள்ள மக்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலிய பெண்ணொருவர் நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளியர்கள் நால்வருடன் இணைந்து இந்த மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கடந்த திங்கட்கிழமை இவர் கைது செய்யப்பட்டார் என்று நேபாள குடிவரவுத்துறையினர் அங்குள்ள ஆஸ்திரேலிய தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் எண்பது சதவீதத்துக்கு மேற்பட்ட இந்துக்கள் வசிக்கும் நேபாளத்தில் மதமாற்றம் செய்வது மற்றும் அது தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள நேபாள அதிகாரிகள் - குறிப்பிட்ட ஆஸ்திரேலிய பெண்மணி - Katiya Graham - நேபாளியர்களுடன் இணைந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பைபிள்கள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்கள்.
சுற்றுலாப்பயணிக்குரிய விஸாவில் தமது நாட்டுக்குள் நுழைந்த பெண்மணியின் மீது பொலீஸார் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
