ஆஸ்திரேலியாவின் 2019-20ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Josh Frydenberg நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி 2019-20ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கை 7.1 பில்லியன் டொலர்கள் surplus எனப்படும் உபரிநிதியுடன்கூடிய நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளதென Josh Frydenberg தெரிவித்தார்.
நேற்றைய நிதிநிலை அறிக்கையின் முக்கிய வெற்றியாளர்கள் யார் என்ற விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள்
48 ஆயிரம் டொலர்கள் முதல் 90 ஆயிரம் டொலர்கள் வரை ஆண்டுவருமானம் ஈட்டுபவர்கள் 2018-19ம் ஆண்டுக்குரிய வருமான வரியை தாக்கல் செய்யும்போது, அவர்கள் கட்டவேண்டிய வரியிலிருந்து சுமார் 1080 டொலர்கள் வரிக்குறைப்பு செய்யப்படும்.
புதிதாக தொழிற்பயிற்சி பெறுவோர்
புதிதாக தொழிற்பயிற்சிபெறும் சுமார் 80 ஆயிரம் பேருக்கு தலா இரண்டாயிரம் டொலர்கள் வரை கொடுப்பனவு வழங்கும் வகையில் 525 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவணிகர்கள்
50 மில்லியன்வரை வருமானமீட்டும் சிறுவணிகர்களுக்கான instant asset write-off தொகை 25 ஆயிரம் டொலர்களிலிருந்து 30 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்து பயணிகள்
பயணிகளுக்கான வாகனத்தரிப்பிடங்கள் அமைப்பதற்கென 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் பல வீதி அபிவிருத்திப் பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
உளவளத்துறை
உளவள மேம்பாடு குறித்த உதவிகளை வழங்குவதற்கென ஒதுக்கப்பட்ட 461 மில்லியன் டொலர்களின் ஒரு பகுதியாக, புதிதாக 30 Headspace மையங்கள் உருவாக்கப்படும் அதேநேரம் பூர்வகுடி இளைஞர்களுக்கான மனவள உதவிகள் வழங்கப்படவுள்ளன.
முதியோர்
வயதுமுதிர்ந்த ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பத்தாயிரம் home care packages-களுக்கெனவும் residential care-க்கெனவும் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பாளர்கள்
பராமரிப்பாளர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வதற்கு வழியேற்படுத்தும்வகையில் சுமார் 84 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ABC மற்றும் SBS
ABC மற்றும் SBS ஊடக நிறுவனங்கள் மேலதிக நிதியுதவியாக 73.3 மில்லியன் டொலர்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு பெறவுள்ளன.
