இலங்கையிலிருந்து தஞ்சக்கோரிக்கையாளராக வந்து குயின்ஸ்லாந்திலுள்ள தபாலகத்தில் பணிபுரிந்த தமிழ் இளைஞர் ஒருவர்- விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட தபால் பொதிகளிலிருந்து பெருமளவிலான பொருட்களை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாடு கடத்தப்படவுள்ளார்.
கடந்த கிறிஸ்மஸ் காலப்பகுதியில் விநியோகிப்பதற்காக வந்த தபால்பொதிகளிலிருந்து பெருந்தொகையான பொருட்களை இவர் திருடியிருக்கிறார் என்று தங்களுக்கு கிடைத்த முறைப்பட்டின் பிரகாரம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளாதாக நீதிமன்றத்தில் பொலீஸார் தெரிவித்திருந்தனர்.
குறிப்பிட்ட இளைஞர் தனது மாமனாருக்கு செலுத்தவேண்டிய சுமார் 95 ஆயிரம் டொலர் கடனை மீளச்செலுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருடப்பட்டதாக கூறப்படும் பொருட்களுக்கான பணமாக 5187 டொலர்களுடன் 500 டொலர்களை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவிக்கவில்லை.
ஆனால், நாட்டின் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தஞ்சக்கோரிக்கையாளராக முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் கீழ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அவர் ஒப்புதல் தெரிவித்தார்.
