நியூசிலாந்து நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களின் கணனிகள் மற்றும் கைத்தொலைபேசிகளின் கடவுச்சொற்களை விசாரணைகளின்போது வெளிப்படுத்தக்கோரும் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
அவற்றை வெளிப்படுத்த தவறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் அதேநேரம் 5000 நியூசிலாந்து டொலர்கள் வரை அபராதமும் செலுத்தநேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அந்நாட்டுப் பிரஜைகள் என அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும் என நியூசிலாந்து எல்லைப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
ஏனைய பல நாடுகளைப் போலவே நியூசிலாந்து குடிவரத்துறை அதிகாரிகளுக்கும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் டிஜிட்டல் கருவிகள் மற்றும் கைத்தொலைபேசிகளை பரிசோதனையிடுவதற்கான அதிகாரம் உள்ளது. எனினும் ஒருவர் தனது தனிப்பட்ட கடவுச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
ஆனால் இனிவரும்நாட்களில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தமது கடவுச்சொற்களை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்படவுள்ளனர்.
இதேவேளை ஒருவரது அந்தரங்க விடயங்கள் அடங்கிய கைத்தொலைபேசி மற்றும் கணணிகளின் கடவுச்சொற்களை வழங்குமாறு நிர்ப்பந்திப்பது அவரது தனியுரிமையை மீறும் செயல் என பல மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
