தேசிய நலனுக்கு பங்கம் ஏற்படாது என்றும் அகதிப்படகுகள் மீண்டும் ஆஸ்திரேலிய கரைகளுக்கு வரமாட்டாது என்றும் உறுதி எட்டப்படும் புள்ளியில் பாப்புவாநியூகினியிலுள்ள அகதிகளில் 150 பேரை நியூசிலாந்து கேட்டுக்கொண்டதற்கு அமைய அந்நாட்டில் குடியமர்த்துவது பற்றி யோசிக்கலாம். ஆனால், தற்போது அதற்குரிய நேரம் அல்ல - என்று உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
பாப்புவாநியூகினியிலுள்ள அகதிகளில் 150 பேரை தங்களது நாட்டில் குடியமர்த்துவது பற்றி நியூசிலாந்து தொடர்ச்சியாக தனது தயார்நிலையை காண்பிப்பது தொடர்பாக Peter Dutton கூறும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நியூசிலாந்து அரசின் நிலைப்பாட்டினை தான் ஒருபோதும் முற்றுமுழுதாக நிராகரிக்கவில்லை என்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இது சரியான நேரமில்லை என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.இது விடயத்தில் ஆஸ்திரேலியா கடைப்பிடிக்கும் நிலைப்பாடு தேசிய நலன் சார்ந்ததாக அமையவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது - நியூசிலாந்தின் அறிவிப்பை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் ஆஸ்திரேலியாவின் பின்கதவினால் அகதிகள் வந்து நுழைவதற்கு நியூசிலாந்து ஒரு காரணியாக அமையக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
