நியூசிலாந்து மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்று ஐம்பது நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சம்பவத்தில் படுகாமடைந்திருந்த துருக்கி பிரஜை ஒருவர் நேற்று கிரைஸ்ட்சேர்ச் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்பிரகாரம், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஐம்பத்தொன்றாக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆஸ்திரேலியாவை சேர்ந்த துப்பாகிதாரி ஒருவரின் இரத்தவெறியாட்டத்தினால் நியூசிலாந்தின் இரண்டு மசூதிகளில் சுமார் 49 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் நெஞ்சில் சுடப்பட்ட நிலையில் கடந்த ஐம்பது நாட்களாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சிறிது சிறிதாக குணமாகிவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அதிக இரத்தோட்டம் ஏற்பட்டத்தை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்து வைத்தியசாலையில் உயிரழந்துள்ள இரண்டாவது நபர் இவராவர்.
துருக்கியை சேர்ந்த 46 வயதான இவர் சம்பவத்தில் படுகாயமடைந்ததை அடுத்து, இவரது மனைவி மற்றும் பெற்றோர் துருக்கியிலிருந்து நியூசிலாந்துக்கு வரவவழைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் குடும்பத்தினர் சூழ்ந்திருந்தபோதுதான் இவரது உயிர் பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் குடும்பத்தினருக்கு நியூசிலாந்து பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
மசூதிகளில் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒன்பது பேர் இன்னமும் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
