நியூசிலாந்து மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைத்தாக்குதல் காணொளிகளை பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆறு பேரில் இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நேரலை காணொளி மற்றும் தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளி வெளியிட்ட விஞ்ஞாபனம் ஆகியவற்றை நீயூசிலாந்து அரசு தடைசெய்திருந்தது.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட காணொளியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டது மாத்திமல்லாமல் அந்த காணொளியில் தங்களது கருத்தையும் மேலதிகமாக இணைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இவர்களில் 51 வயது நபர் மற்றும் 18 வயது இளைஞன் ஒருவர் ஆகியோர் இழைத்திருக்கும் குற்றத்தின் பாரதூரம் கருதி அவர்களுக்கு பிணைவழங்குவதற்கு பொலீஸார் ஆட்சேபணை தெரிவித்ததையடுத்து நீதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களை தடுப்பில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான துப்பாக்கிதாரிக்கு எதிராக 50 கொலைக்குற்றச்சாட்டுக்களும் 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
