அடிவயிற்று வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணொருவரிடம் பாலியல் சில்மிஷம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பின்னணி கொண்ட மருத்துவர் ஒருவரை குற்றவாளி என பிறிஸ்பன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
அவருக்கு suspended one-year jail term-ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
பிறிஸ்பனில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்ற நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடிவயிற்றில் வலி காரணமாக பெண்ணொருவர் குறிப்பிட்ட மருத்துவரிடம் சென்றபோது அவர் அத்துமீறி நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டு அவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட மருத்துவர் தன்னுடன் அத்துமீறி நடந்துகொள்வதற்கான ஆதாரத்தை சேகரிப்பதற்காக, இரண்டாவது தடவை அவரை காணச்சென்றபோது குறிப்பிட்ட பெண் அவருடனான உரையாடலை பதிவு செய்திருக்கிறார். மருத்துவ சோதனையின்போது இருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில், குறிப்பிட்ட மருத்துவர் தான் எல்லை மீறி நடந்துகொள்வதாக ஒப்புக்கொள்வதாக அவரது குரலிலேயே பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் குறிப்பிட்ட பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்றும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த குற்றச்சாட்டை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.
இந்த சம்பவத்தினால் தீராத மன உளைச்சல் மற்றும் நித்திரையில்லாத்தன்மை ஆகியவற்றால் தான் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட பெண் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மருத்துவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என்று பொலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் நீதிபதி ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையே வழங்கியுள்ளார்.
