நியூஸிலாந்தில் மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன் துப்பாக்கி ஏந்தியபடி தனது புகைப்படத்தை வெளியிட்ட அடிலெய்ட் நபர் ஒருவர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ள நீதிபதி, மறு அறிவித்தில்வரை அவர் இணையத்தை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட நபரது சமூக வலைத்தள குறிப்புக்கள் தொடர்பாகவும் நியூஸிலாந்து மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இவர் எழுதிய எதிர்வினைகள் குறித்தும் பொலீஸாருக்கு அறியக்கிடைத்தது என்றும் உடனடியாக இவரை தேடிச்சென்று கைது செய்ததாகவும் அடிலெய்ட் நீதிமன்றத்தில் பொலீஸ் தரப்பினர் கூறினர்.
குறிப்பிட்ட நபரது வீட்டை சோதனை செய்ததில் அங்கிருந்து இரண்டு விளையாட்டு துப்பாக்கிகளும் கத்தி மற்றும் லத்தி போன்றவையும் அவரது படுக்கையின் கீழிருந்து மீட்கப்பட்டதாக பொலீஸார் கூறுகிறார்கள்.
விடயத்தை விசாரித்தறிந்த நீதிபதி குறிப்பிட்ட நபரை பிணையில் விடுதலை செய்துள்ளார். அவர் மறு அறிவித்தல்வரை இணையத்தை உபயோகிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். தனது துணைவியாருடன் நீதிமன்றிலிருந்து பிணையில் வெளியேறியபோது அவர் ஊடகங்களிடம் பேசவில்லை.
