SKIP TO MAIN CONTENT

பிரியா -நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ அனுமதி!

ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில், நாடுகடத்தலுக்கெதிராக நீண்ட சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினருக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது.

Priya & Nadesalingam with their children Kopika and Tharnicaa, in Biloela 10 June, 2022
Priya & Nadesalingam with their children Kopika and Tharnicaa, in Biloela 10 June, 2022 Source: SBS / SBS Tamil

3 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

பிரியா-நடேஸ் குடும்பத்தினர் சமூக தடுப்பிலிருந்து (community detention) விடுவிக்கப்பட்டு, குயின்ஸ்லாந்தின் Biloela சென்று வாழ்வதற்கு லேபர் அரசு அனுமதியளித்திருந்த பின்னணியில், தற்போது இக்குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles அறிவித்துள்ளார்.

குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற முறையில், தனக்கு முன் இருந்த அனைத்து தெரிவுகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் அடிப்படையில், குடிவரவுச் சட்டம் 1958 இன் பிரிவு 195A இன் கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ வழிசெய்யும்வகையில் நிரந்தர விசாக்கள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Andrew Giles அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பின்னணியில், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இக்குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என உறுதியளித்ததற்கிணங்க, இன்று அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.

நடேசலிங்கம் குடும்பத்தின் சிக்கலான மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளை கவனமாக பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் லேபர் அரசின் இச்செயற்பாடு சட்டவிரோதமாக வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற முடியாது என்ற கொள்கையை நலிவடையச்செய்துள்ளதாகவும், சட்டவிரோத படகுப் பயணங்களை மேலும் உந்துவிப்பதாகவும் எதிர்கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் Karen Andrews விமர்சித்துள்ளார்.

இருப்பினும் ஆஸ்திரேலியா நோக்கிவரும் சட்டவிரோத படகுகள் திருப்பி அனுப்பப்படும் என்பதை கடந்த இரண்டு மாதங்களில் தமது அரசு நிரூபித்துள்ளதாக அமைச்சர் Andrew Giles குறிப்பிட்டுள்ளார்.

اندرو جایلز، وزیر مهاجرت آسترالیا
اندرو جایلز، وزیر جدید مهاجرت آسترالیا Credit: MICK TSIKAS/AAPIMAGE

நிரந்தர விசா கிடைத்ததையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் நான்கு ஆண்டுகளுக்கு மேலான தமது போராட்டத்தை தம்மால் மறக்க முயாது எனவும் SBS தமிழிடம் தெரிவித்த பிரியா, லேபர் அரசுக்கும் தமது போராட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரியா- நடேஸ் குடும்பத்தின் பின்னணி

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

The Tamil family has been told to get comfortable in detention on Christmas Island, where they remain.
Source: Supplied

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

Tharunicaa and Kopika Murugappan
Tharunicaa and Kopika Murugappan Source: SBS / SBS News

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

தருணிகா மருத்துவசிகிச்சைக்காக கிறிஸ்மஸ் தீவிலிருந்து பெர்த்திற்கு அழைத்துவரப்பட்டதையடுத்து முழுக்குடும்பமும் பெர்த்தில் தற்காலிகமாக சமூகத்தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தருணிகா குழந்தை என்பதால் பெற்றோரை அவரிடமிருந்து பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

பின்னர் லேபர் கட்சி வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கமைய பெர்த்திலிருந்து விடுவிக்கப்பட்டு Biloela சென்ற இக்குடும்பம் தற்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now