ஆஸ்திரேலியாவுக்கு குடியேற வருகின்றவர்கள் நகரங்களைத் தவிர்த்து உள்ளூர் பகுதிகளில் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தால் அவர்களுக்கு எளிதாக விசா வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்து தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் செய்தி நாமறிந்தது.
நாட்டில் எது நகரம், எது உள்ளூர் பகுதி (Regional Areas) என்று ஒரு பட்டியலை அரசு வைத்துள்ளது. அப்படியான நகரங்களின் பட்டியலில் சிட்னி, மெல்பன், பிரிஸ்பேன் நகரங்களுடன் பெர்த், கோல்ட் கோஸ்ட் போன்ற நகரங்களும் உள்ளன. இந்த “நகரங்கள்” எனும் பட்டியலில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரான பெர்த், குயீன்ஸ்லாந்து மாநிலத்தின் பிரபல சுற்றுலாதள நகரமான கோல்ட் கோஸ்ட் எனும் நகரமும்இதுவரை இருந்து வந்தன. ஆனால் இந்த இரு நகரங்களையும் “நகரங்கள்” எனும் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, இந்த நகரங்களை உள்ளூர் பகுதி (Regional Areas) பட்டியலில் சேர்ப்பதாக நேற்று குடிவரவுத்துறை அமைச்சர் David Coleman அறிவித்தார். மேலும் உள்ளூர் பகுதி (Regional Areas) களுக்கு குடியேறுவோருக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டிருக்கும் விசாக்களின் எண்ணிக்கையையும் 23,000 யிலிருந்து 25,000 ஆக உயர்த்துவதாக அமைச்சர் அறிவித்தார்.
பெர்த், கோல்ட் கோஸ்ட் எனும் இரு நகரங்களும் “நகரங்கள்” எனும் பட்டியலிலிருந்து நீக்க்கப்பட்டு இந்த நகரங்கள் உள்ளூர் பகுதி (Regional Areas) என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த நகரங்களில் குடியேற விசா கிடைப்பது எளிதாகிறது. மேலும், இதன் மூலம், இந்த நகரங்களில் குடியேற நிரந்தர விசா கிடைப்பது எளிது என்பதால் இந்த நகரங்களிலுள்ள பல்கலைக் கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றால் விசாவுக்கான அதிக புள்ளியும் கிடைக்கும், குடியேற்ற விசாவும் எளிது எனும் நோக்கில் அதிகமான மாணவர்கள் இந்த நகரங்களுக்கு கல்வி கற்க வருவார்கள் என்று மாநில அரசுகள் கருதுகின்றன.
