மெல்பேர்னில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் நல்லாட்சி தொடர்பான சிறப்புரையாற்றுவதற்கு நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern எதிர்வரும் வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வருகிறார்.
மெல்பேர்ன் நகரமண்டபத்தில் வியாழனன்று இரவு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் "நல்லாட்சி என்பது ஏன் முக்கியமானது" - என்ற தலைப்பில் அவர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
2017 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற Jacinda Ardern நியூசிலாந்து அரசில் மேற்கொண்டுவரும் பல்வேறு மாற்றங்களும் ஆளும் திறனில் காண்பித்துவரும் முன்னேற்றங்களும் உலகளவில் வரவேற்பை பெற்றிருப்பதுடன் கிறைஸ்ட் சேர்ச்சில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நியூசிலாந்து மக்களை அவர் ஒன்றிணைத்துக்கொண்ட விதமும் அதன்பொருட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளும் உலகளவில் அவரது ஆளுமைத்திறனை வெளிக்காண்பித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் நிதிநிலை அறிக்கையில் அவர் முன்வைத்துள்ள விடயங்கள் உட்பட அண்மைய அரசு மாற்றங்கள் அவருக்கு உள்நாட்டில் மேலும் செல்வாக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படும் பின்னணியில் அவரது அனுபவத்தையும் அவரது ஆட்சிப்பாதை தொடர்பான ஆரோக்கியமான விடயங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு இந்த வாரம் அவர் மெல்பேர்ன் வருகிறார்.
