பூமிக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS - International Space Station) இருந்து கொண்டே, முன்னாள் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடினார் என்று விண்வெளி வீரர்களில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதையும், அதனைத் தாம் விசாரிப்பதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது.
ஆறு மாதங்கள் விண்வெளியில், ISSஇல் தங்கியிருந்த ஆன் மெக்லென் (Anne McClain) என்ற விண்வெளி வீரர் தனது முன்னாள் மனைவியின் (சரியாகத் தான் படிக்கிறீர்கள்) கணக்கிலிருந்து பணத்தை எடுத்திருந்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் (The New York Times) பத்திரிகை முதன் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆன் மெக்லென் அடையாளத் திருட்டு செய்ததாக, மெக்லெனின் மனைவி, முன்னாள் விமானப்படை உளவுத்துறை அதிகாரி சம்மர் வோர்டன் (Summer Worden) அமெரிக்க வர்த்தக ஆணையத்திடம் ஒரு கோரிக்கையை சமர்ப்பித்திருந்தார்.
இவர்கள் விவாகரத்து செய்த பின்னர், தனது மகனை ஆன் மெக்லென் பொறுப்பேற்க தீர்ப்புக் கிடைக்கும் என்ற நோக்கத்தில், தனது தனி கணக்குகள், நிதி குறித்த பதிவுகளை எல்லாம் ஆன் மெக்லென் பார்வையிட்டுள்ளார் என்று நாசாவின் காவல்துறை அதிகாரியிடம் சம்மர் வோர்டன் ஒரு முறைப்பாட்டையும் செய்திருந்தார்.
வங்கிக் கணக்குகளைப் பார்வையிட்டதை ஆன் மெக்லென் ஒப்புக் கொண்டாலும், வேர்டனின் மகனின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகத் தான் அவர் அப்படி செய்தார் என்றும், இருவரும் திருமணமாகி இருந்த போது பயன்படுத்திய கடவுச்சொல்லைப் பயன்படுத்தித் தான் அந்தக் கணக்குகளைப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
“அவர் முறையற்ற எதையும் செய்யவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் கடுமையாக மறுக்கிறார்” என்றும் விசாரணையில் “முற்றிலும் ஒத்துழைக்கிறார்” என்றும் ஆன் மெக்லெனின் வழக்குரைஞர் ரஸ்டி ஹார்டின் (Rusty Hardin) கூறினார்.
பெண்களை மட்டுமே கொண்ட ஒரு குழு, விண்வெளியில் நடப்பதற்கு நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அது தடைப்பட்டுவிட்டது என்று நாசா அறிவித்திருந்தது. அந்த வேளையில் தான் ஆன் மெக்லென் மீதான குற்றச் சாட்டு பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால், பெண்கள் குழு விண்வெளியில் நடக்காமல் போனதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நாசாவின் பேச்சாளார் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆன் மெக்லெனும் சம்மர் வோர்டனும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், வோர்டன் தன்னைத் தாக்கியதாக மெக்லென் குற்றம் சுமத்தி, பின்னர் 2018 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள். அது கூட, தனது மகனைப் பொறுப்பேற்கும் முயற்சியில் செய்த குற்றச்சாட்டு என்று சம்மர் வோர்டன் கூறுகிறார். அந்த வழக்கு பல மாதங்களின் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆன் மெக்லனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், விண்வெளியில் இருந்து கொண்டே குற்றம் புரிந்த முதல் நபராவார்.
