நவுறு தீவிலுள்ள அகதிச்சிறுவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எஞ்சியுள்ள 40-50 வரையான சிறுவர்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படும் அதேநேரம் இந்தவருட இறுதிக்குள் நவுறு தீவிலுள்ள அனைத்து சிறுவர்களையும் அங்கிருந்து அகற்றுவதே ஆஸ்திரேலியாவின் திட்டம் எனவும் பிரிட்டனுக்கான ஆஸ்திரேலியத்தூதுவர் தெரிவித்துள்ளார்.
நவுறுவிலுள்ள அகதிச்சிறுவர்கள் அனைவரையம் அங்கிருந்து அக்கற்றவேண்டும் என்று தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களினால் துரிதமாக செயலாற்றிவரும் ஆஸ்திரேலிய பிரதமர் மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவுறுவிலிருந்து மருத்துவ தேவைகளுக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படும் அகதிகள் அடிலெய்ட் மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள வைத்தியசாலைகளில் அவர்களுக்கு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் - மருத்துவ சேவைகளுக்காக அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவதை முன்னர் எதிர்த்து வந்த ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு திணைக்களம் தற்போது அதற்கு இணங்கியிருப்பாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் Scott Morrison இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது - நவுறுவிலுள்ள அகதிகளுக்கு மருத்துவ வசதிகள் இல்லை என்றும் அவர்கள் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்றும் லேபர் கட்சி உட்பட பல தரப்புக்கள் குரல் எழுப்பியவண்ணமுள்ளன. ஆனால், நவுறுவிலுள்ள மக்கள் அங்குள்ள மருத்துவ வசதிகளைத்தான் பெற்றுவருகிறார்கள். ஆக, அங்குள்ள மருத்துவ தரப்புக்களையும் மக்களையும் மதிக்கும் வகையில் நடந்துகொள்ளவேண்டியது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானதும் பொறுப்புவாய்ந்ததும் ஆகும் - என்று கூறியுள்ளார்.
