நவுறு மற்றும் மனுஸ் தீவில் உள்ள சுமார் ஆயிரத்து இருநூறு அகதிகளின் சார்பில் ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக மாபெரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டுவரும் சித்திரவதை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராக தமக்கு நீதி வேண்டி இந்த கூட்டு வழக்கினை அகதிகள் சார்பில் National Justice Project அமைப்பைச்சேர்ந்த பிரபல சட்டவாளர் Julian Burnside குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த கூட்டுவழக்கு குடிவரவு அமைச்சுக்கு எதிராக அல்லாது ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு தரப்பில் இன்னமும் எந்தப்பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், வழக்கினை தாக்கல் செய்திருக்கும் National Justice Project அமைப்பை சேர்ந்த சட்டத்தரணிகள் கூறும்போது-மேற்படி தீவுகளில் கடந்த ஐந்து வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகளில் 12 பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள். இன்னும் பலர் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருகின்றன. பாதுகாப்பும், சுதந்திரமான நடமாட்டமும் தடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் அடிப்படையில் இந்த வழக்கு அமையவுள்ளது - என்று தெரிவித்துள்ளனர்.
Share
