நவுறு தடுப்புமுகாமிலுள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தையை அதன் பெற்றோருடன் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தையை உடனடியாக சிட்னி கொண்டுவர அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மெல்பேர்ன் பெடரல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அனுப்ப மறுத்திருந்த ஆஸ்திரேலிய அரசு, வேண்டுமானால் தாய்வான் கொண்டுசெல்ல முடியும் என தெரிவித்திருந்தது.
இவ்விடயத்தை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் நேற்று குறிப்பிட்டபோதிலும், தாய்வானில் குழந்தைக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை ஆஸ்திரேலிய அரசு நிரூபிக்கத் தவறியுள்ளதாகக் கூறிய நீதிபதி, அக்குழந்தையை அதன் பெற்றோருடன் சிட்னி Westmead மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அடுத்த 48 மணிநேரத்திற்குள் அக்குழந்தையும் அதன் பெற்றோரும் ஆஸ்திரேலியா அழைத்துவரப்படும் அதேநேரம் குழந்தையின் சிகிச்சை முடியும்வரை அவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் மட்டும் சுமார் 12 குழந்தைகள் இவ்வாறு மேலதிக சிகிச்சைக்களுக்காக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படுவதற்கான அனுமதி நீதிமன்ற வழக்குகள் ஊடாக பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
