இந்தப் புதிய வீசா தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று முன்னர் சொல்லப் பட்டிருந்தாலும், எந்த நாடுகள் என்ற விவரமோ அல்லது எத்தனை தொழிலாளர்களுக்கு இந்த வீசா வழங்கப்படும் என்பதோ தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீசாவை சில Liberal கட்சி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள், இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சி கூட்டணி அமைத்திருக்கும் National கட்சியினருக்கு இது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

இந்த வீசா, விவசாயம், மீன் வளம், வனவியல் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் என்றும், அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க வழி உள்ளது என்றும் துணைப் பிரதமர் Barnaby Joyce, வேளாண் அமைச்சர் David Littleproud, வெளியுறவு அமைச்சர் Marise Payne மற்றும் குடிவரவு அமைச்சர் Alex Hawke ஆகியோர் இணைந்து கையொப்பமிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், “The Australian Agriculture visa” என்று விவரிக்கப்படும் இந்த வீசா பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழு நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு, இந்த வீசா செயல் பாட்டுக்கு வரும். இந்த வீசாவை உருவாக்குவதற்கான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 2021 இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்.
“வீசாவின் செயல்பாடு, இதில் பங்கு கொள்ளும் நாடுகளுடனான பேச்சுவார்த்தையைப் பொறுத்தது”
என்று இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு வரும் விமானங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இந்த வீசா வழங்கப்படும் முறை கோவிட்-19 கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் பெரிதாக இணைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
“வெளிநாட்டு ஊழியர்களை நாட்டினுள் கொண்டு வருவதற்கு, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் மிகப்பெரிய தடையாக உள்ளன, என்றும் பண்ணைகளில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க, போதியளவு ஆஸ்திரேலியர்கள் இல்லை” என்றும் அமைச்சர்கள் இணைந்து கையொப்பமிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை என்பது பெருந்தொற்று பரவுவதற்கு முன்னரே விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள ஒரு பிரச்சினையாகும். பயிரிடும் காலத்திலும் அறுவடை காலத்திலும் தொழிலாளர்களை ஈர்க்க ஒரு வீசா தேவை என்று வேளாண்துறையினர் பல வருடங்களாகக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அப்படியானதொரு வீசாவை ஆதரிப்பதாக, தேசிய விவசாயிகள் கூட்டமைப்புக்குப் பிரதமர் Scott Morrison கூறியிருந்தாலும் அவரது கட்சியிலுள்ள பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்த வீசா நடைமுறைக்கு வந்தால், இது போன்ற பல ‘தொழில் சார்ந்த வீசாக்கள்’ நாட்டில் அறிமுகமாகலாம் என்று சிலரும், பசிஃபிக் நாட்டு தொழிலாளர் நடைமுறையிலிருக்கும் திட்டங்களை இது குறைத்து மதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று வேறு சிலரும் கவலைப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்தப் புதிய வீசா இங்குள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த தீவிர கவலைகளைத் தீர்க்கும் வகையில் எதுவும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சியின் உள்துறை விவகாரம் குறித்த பேச்சாளார் Kristina Keneally முறையிட்டார்.
வேளாண் தொழிலாளர்கள் அதிகப்படியான சுரண்டலை எதிர்கொள்வார்கள் என்று Kristina Keneally மேலும் கூறினார்.
விவசாய தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக விளை பொருட்களின் விலை 25 சதவீதம் வரை இந்த ஆண்டு உயரும் என்று அரச பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
