விக்டோரியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு குறையாததை அடுத்து, மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் - முன்னர் அறிவிக்கப்பட்டபடி - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலநிலை மற்றும் பேரிடர் நிலை நவம்பர் 8 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேர கொரோனா நிலவரம் தொடர்பாக இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது, 12 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் Premier Daniel Andrews கூறினார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று இரவு முதல் மேலும் இறுக்கமடைவதாகவும் Daniel Andrews அறிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றாளர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள் என அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், 11வது நாளன்று மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனையை செய்வதற்கு மறுத்தால், அவர்கள் மேலும் 10 நாட்களுக்கு அதாவது மொத்தம் 21 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேவேளை, மெல்பேர்ன் நகரிலிருந்து விக்டோரியாவின் regional பகுதிகளுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு உரிய காரணங்களிருக்கவேண்டும் என்றும் அநாவசிய பயணங்களை மேற்கொள்பவர்கள் குறித்து அங்கு வாழ்பவர்களும் வர்த்தக நிலையங்களும் பொலீஸாருக்கு அறிவிக்கவேண்டும் என்றும் Daniel Andrews குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், பயணக்கட்டுப்பாடுகளை மீறி விக்டோரியாவின் regional நகருக்கு சென்ற மெல்பேர்ன்வாசியினால் புதிய பரவல் ஏற்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
