வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது என்று நியூசிலாந்து நாட்டில் புதிதாக பதவியேற்கவிருக்கும் லேபர் கூட்டணி அரசு அறிவித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் உள்ளூர்வாசிகள் வீடுகள் வாங்குவது கனவாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தாம் பதவிக்கு வந்தால் “நியூசிலாந்து விற்பனைக்கல்ல” என்றும், வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது என்று புதிய கொள்கையை அறிமுகம் செய்வோம் என்றும் சிறிய கட்சியான New Zealand First எனும் கட்சி தேர்தல் வேளையில் அறிவித்திருந்தது. New Zealand First கட்சியால் தனியாக பதவிக்கு வர இயலவில்லை என்றபோதிலும், தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றிய லேபர் கட்சியுடன் New Zealand First கட்சி இணைந்து கூட்டணி அரசை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தது. எனவே வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது எனும் புதிய கொள்கையை தமது அரசு அறிமுகம் செய்யும் என்று நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் Jacinda Ardernஅறிவித்துள்ளார். New Zealand First கட்சியின் தலைவர் Winston Peters துணைப் பிரதமராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார். நாட்டில் குடியேறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும் புதிய அரசு திட்டமிட்டுள்ளது.
