நியூசிலாந்தில் White Island எரிமலை வெடித்த சம்பவத்தில் மரணமடைந்த ஐவரில் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை மூன்று என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் பதினொரு பேரைக்காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட தீவுப்பகுதிக்கு இன்னொரு உல்லாசக்கப்பலில் சென்ற இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் தாங்கள் தெய்வாதீனமாக இந்த சம்பவத்தில் தப்பிவிட்டதாக கூறியுள்ளார்கள்.
இலங்கையைச் சேர்ந்த ஜெகத் கொத்தலாவலவும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உல்லாசக்கப்பலில் White Island அருகே சென்றுகொண்டிருந்தபோது எரிமலை வெடித்துச்சிதறியதாகவும் தங்களது கப்பல் பாதுகாப்பான தூரத்தில் வந்துகொண்டிருந்த காரணத்தினால், தமக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஜெகத் கொத்தலாவல கூறியுள்ளார். தங்களது கப்பலில் தாங்கள் மாத்திரமே இலங்கையர்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதுஒருபுறமிருக்க , சம்பவத்தில் பலியான ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசெம்பர் நான்காம் திகதி, சிட்னியிலிருந்து புறப்பட்ட உல்லாசக்கப்பலில், இந்த White Island-க்கு சென்ற ஆஸ்திரேலியர்களே பலியாகியும் படுகாயமடைந்தும் காணமல்போயுமுள்ளார்கள் என்று தெரியவருகிறது.
கப்பலில் சென்ற 47 உல்லாசப்பயணிகளில் 37 பேர் எரிமலை வெடித்தபோது தீவிலிருந்துள்ளார்கள். இவர்களில் 24 பேர் ஆஸ்திரேலியர்கள். இவர்களில் மூவர் பலியானதாக நம்பப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் கொடூரமான எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளார்கள் என்று உலங்குவானூர்தியிலும் படகுகளிலும் சென்று அவர்களை மீட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். சிலரது உடல் 90 வீதமான எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் முகம் முழுவதுமாக எரிந்தவர்களும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர், எரிமலை வெடித்தவுடன் எரிகாயங்களுடன் கடலுக்குள் ஓடிவந்து விழுந்துள்ளார்கள். அவர்களை கொடிய காயங்களுடனேயே மீட்டு கரைக்குக்கொண்டுவந்திருக்கிறார்கள் மீட்புப்பணியாளர்கள்.
