Notre Dame தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு உண்மையான காரணம் எதுவென்ற உறுதியான முடிவெதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லையென்றாலும் அநேகமாக தேவாலயத்திற்குள் ஏற்பட்ட மின் ஒழுக்குத்தான் இந்த பாரிய விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பிரஞ்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் Notre Dame தேவாலயத்தில் புனருத்தாரண பணிகளில் ஈடுபட்டுவந்த சுமார் நாற்பது தொழிலாளர்கள் இதுவரை விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notre Dame தேவாலயத்தில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளபோதும் மரங்களினாலான உட்கட்டுமானங்களில் பல பகுதிகள் உடைந்துவிழக்கூடிய நிலையில் காணப்படுவதால் விசாரணை அதிகாரிகளும்கூட தேவாலயத்தினுள் உள்ளே நுழையமுடியாதிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேவாலயத்தினை மீள் நிர்மாணித்து மக்கள் பாவனைக்கு திறப்பதற்கு ஐந்து வருடங்களாகும் என்றும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக தேவாலயத்திருத்தப்பணிகளை நிறைவுசெய்வோம் என்றும் பிரஞ்சுப்பிரதமர் மக்றோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனால், தீயினால் ஏற்பட்ட பேரழிவை பார்க்கும்போது தேவாலயத்தை முழுமையாக புனருத்தாரணம் செய்து மக்கள் பாவனைக்கு ஏற்றதாக மாற்றுவதற்கு குறைந்தது 15 வருடங்களாகலாம் என்று கட்டடத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
