நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சாலை விதி ஒன்றில் இன்று முதல்(செப்டம்பர் 26) புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
80km/h வரையான வேகத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சாலைகளில் அவசரசேவைப்பிரிவு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கு அருகாக செல்லும்போது வாகனத்தின் வேகத்தை 40km/h-ஆக குறைக்க வேண்டுமென்பது சட்டமாகும்.
இச்சட்டமானது பொதுவாக Ambulance, Fire services, Police, State Emergency Service மற்றும் heavy vehicle enforcement vehicles ஆகியவற்றையே இதுநாள்வரை உட்படுத்தியிருந்தது.
ஆனால் இன்றுமுதல் இச்சட்டமானது tow trucks மற்றும் breakdown assistance வாகனங்களையும் உட்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 90km/h மற்றும் அதற்கு அதிகமான வேகக்கட்டுப்பாட்டைக் கொண்ட சாலைகளில் செல்லும்போது இவ்வாறான சந்தர்ப்பம் எழுந்தால் வாகனத்தின் வேகத்தை 40km/h ஆக குறைக்க வேண்டிய தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும்போது இவ்வாறான வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பான முறையில் வேகத்தைக் கட்டுப்படுத்தி செல்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
80km/h வரையான வேகத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சாலைகளில் மேற்குறிப்பிட்ட வாகனங்கள் வீதியில் ஒலி எழுப்பியவாறோ, அல்லது சிவப்பு, நீல நிற சமிக்ஞை விளக்கை ஒளிர்ந்தவாறோ நிறுத்திவைக்கப்பட்டிருந்தால், அல்லது மெதுவாகச் சென்றுகொண்டிருந்தால் நீங்கள் கீழ்க்காணும் விடயங்களைச் செய்ய வேண்டும்.
1. உங்கள் வாகனத்தின் வேகத்தை நன்றாகக் குறைத்து தேவையேற்படின் நிறுத்துவதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
2. குறித்த வாகனத்தை 40km/h -க்கு மேல் வேகத்தை அதிகரிக்காமல் கடந்து செல்ல வேண்டும்.
3. குறித்த வாகனத்திற்கு அருகில் இருக்கும் பணியாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதளவு தூரத்திற்குச் சென்ற பின்னரே, மீண்டும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு அந்த இடத்தில் வைத்து $457 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும். 3 demerit புள்ளிகளும் குறைக்கப்படும்.
வீதியோரங்களில் கடமையில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு தெரிவித்துள்ளது.
