நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த வருடம் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தியதன் மூலம் வீதி விதிகளை மீறிய சாரதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மொத்த அபரதாதத்தொகை ஆறுகோடி ஆஸ்திரேலிய டொலர்கள் என்று மாநிலத்தின் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், வாகனம் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்துபவர்களை படமெடுக்கும் கமராக்கள் சுமார் 45 இடங்களில் பொருத்தப்பட்டன.
2020 ஜனவரி மாதம் முதல் 2020 டிசெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், இவ்வாறு வாகனம் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்தியவர்களுக்கான மொத்த அபராதத்தொகை ஆறு கோடி ஏழு லட்சத்து 89 ஆயிரத்து 900 டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் ஐந்து கோடி 64 லட்சம் டொலர்கள் கமராவினால் படம்பிடிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலான அபராதம் என்றும் மிகுதித்தொகை பொலீஸாரினால் நேரடியாக பிடிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதே குற்றத்தை இழைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த அபராதத்தொகை 86 லட்சத்து 29 ஆயிரத்து 181 டொலர்கள் மாத்திரமே என்று போக்குவரத்து திணைக்களம் தரவுகளை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது
