நியூ சவுத்வேல்ஸ் மாநில வீதிகளில் நிறுவப்பட்டுள்ள Speed camera warning signs-வேக கண்காணிப்பு கமரா முன்னெச்சரிக்கைப் பலகைகளை அகற்றிவிடுவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுவரும் நிலையில், இது தவறான நகர்வு என மோட்டார் வாகன சேவைகளை வழங்கிவரும் NRMA அமைப்பு எச்சரித்துள்ளது.
'இந்த இடத்தில் அல்லது சிறிது தூரத்தில் வேக கண்காணிப்பு கமரா உள்ளது' என்ற முன்னெச்சரிக்கை பலகைகள் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவற்றைப் பார்த்தவுடன் வாகனத்தின் வேகத்தை குறைக்கிறார்களே தவிர எப்பொழுதும் சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற பொறுப்பை உணர்வதில்லை என்றும் இம்முன்னெச்சரிக்கை பலகைகள் வீதி பாதுகாப்பிற்கு எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து குறித்த முன்னெச்சரிக்கைப் பலகைகளை அகற்றுவதற்கு திட்டமிடுவதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் Andrew Constance தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த முன்னெரிச்சைக் பலகைகள் மிகவும் அவசியமானவை என்றும், தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற நினைப்பூட்டுதல் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுவதால் அவர்கள் கூடுதல் கவனத்தோடு வாகனம் ஓட்டுவதற்கு இது வழிவகை செய்கின்றது என்றும் NRMAபேச்சாளர் Peter Khoury சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதாயின் அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரை பணிக்கமர்த்துவதே சரியான நகர்வாக இருக்கும் என்றும் Peter Khoury தெரிவித்துள்ளார்.
இதேவேளை வேக கண்காணிப்பு கமரா முன்னெச்சரிக்கை பலகைகள் அகற்றப்படும் நிலை வந்தால் அரசுக்கு அபராதங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவில் அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள Peter Khoury அப்பணம் முழுவதும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
