நியூ சவுத் வேல்ஸ்-விக்டோரியா மாநிலங்களுக்கிடையிலான எல்லை எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்படும் என NSW Premier Gladys Berejiklian இன்று அறிவித்தார்.
கடந்த ஜுலை ஆரம்பம் முதல், விக்டோரியா மாநிலத்தவர்கள் பயணம் செய்யமுடியாதபடி நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தனது எல்லையை மூடியிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவலை வெற்றிகரமாக முறியடித்துள்ளமையைத் தொடர்ந்து விக்டோரிய மாநிலத்தவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு பயணம் செய்வதற்கு ஏதுவான வகையில் தமது எல்லையைத் திறப்பதாக Premier Gladys Berejiklian அறிவித்தார்.
நாட்டின் அனைத்து மாநிலத்தவர்களும் பயணம் செய்யக்கூடியவகையில் எல்லைகளைத் திறக்கும் ஒரே மாநிலம் நியூ சவுத் வேல்ஸ் என்பதை பெருமையுடன் பதிவுசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி நவம்பர் 23 நள்ளிரவு முதல் NSW -விக்டோரிய எல்லை திறக்கப்படும் எனவும் அன்றையதினம் முதல் நியூ சவுத் வேல்ஸ் வணிகங்கள், வாடிக்கையாளர் விவரங்களை சேகரிக்க QR Code நடைமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக மூவருக்கு சமூக பரவல் மூலம் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து தனிமைப்படுத்தலில் உள்ள 6 பேருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக எவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் கோவிட் தொடர்பான மரணங்களும் பதிவாகவில்லை.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
