SKIP TO MAIN CONTENT

இந்தியா வழங்கும் OCI அட்டை -வெளிநாட்டு குடியுரிமை சலுகையில் மாற்றம்

இந்தியா வழங்கும் வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizens of India) திட்டத்தில் பல மாற்றங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது.

Overseas Citizen of India or OCI card
Overseas Citizen of India or OCI card Source: SBS

2 min read

Published

By Raysel


Skip to article content

இந்தியா வழங்கும் வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizens of India) திட்டத்தில் பல மாற்றங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது. OCI அட்டை வைத்திருப்பவர்கள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் இந்தியா வந்து எவ்வளவு காலமும் தங்கலாம் என்பதற்கான பல நுழைவு (multiple entry) வாழ்நாள் விசாவைப் பெறலாம். ஆனால் ஆராய்ச்சி, மதம் பரப்புதல், Tabligh போன்ற இஸ்லாமியப் பயணம், மலையேறுதல், ஊடகப்பணி உள்ளிட்ட சில பணிகளுக்கு OCI அட்டை வைத்திருக்கும் ஒருவர் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர் (FRRO) அல்லது இந்திய தூதரகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் OCI அட்டைதாரர்களுக்கு சில சலுகைகளையும் இந்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானக் கட்டணங்கள், தேசிய பூங்காக்கள், தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைப் பார்வையிடுவதற்கான நுழைவுக் கட்டணம் போன்ற அம்சங்களில் இந்திய குடிமக்கள் போன்று OCI அட்டை வைத்திருப்போரை சமமாக நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.

OCI அட்டைதாரர்கள் இந்தியாவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றவும் அல்லது வெளிநாட்டு அரசாங்க அமைப்புகளில் பயிற்சியில் (internship) ஈடுபடவும் அல்லது இந்தியாவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு தூதரகப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறவும் சிறப்பு அனுமதி தேவை என்று அரசு அறிவித்துள்ளது. மேலும்  மத்திய அரசு அல்லது அதன் அமைப்பு அறிவிக்கும் பாதுகாக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் வரும் எந்த இடத்தையும் OCI அட்டைதாரர்கள் பார்வையிட சிறப்பு அனுமதி தேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட காலம் தங்குவதற்கு OCI அட்டைதாரர்கள் தற்போது Foreigners Regional Registration Officer (FRRO) அல்லது வெளிநாட்டவர் பதிவு அலுவலருடன் (Foreigners Registration Officer - FRO) பதிவு செய்யவேண்டும் என்ற நடைமுறையிலிருந்து இனி விலக்கு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் OCI அட்டை வைத்திருக்கும் ஒருவரின் நிரந்தர குடியிருப்பு முகவரியில் மாற்றம் ஏற்படும்போது அல்லது அவர் தொழிலை மாற்றும்போது FRRO அல்லது FRO க்கு OCI அட்டை வைத்திருக்கும் அவர் தெரிவிக்க வேண்டும்.

OCI அட்டை வைத்திருக்கும் ஒருவர் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டவர் ஆவார். அவர் இந்திய குடிமகன் அல்ல என்றாலும், அவர் இந்தியாவில் வாழாத இந்தியர்போன்று இனி நடத்தப்படுவர் என்றும் அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக  National Eligibility cum Entrance Test (NEET), Joint Entrance Examination (JEE) (Mains), JEE (Advanced) போன்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், தகுதி பெறவும் OCI அட்டைவைத்திருக்கும் ஒருவர் வெளிநாடுகளில் வாழும் இந்தியர் போன்று சமமாக நடத்தப்படுவர். ஆனால் OCI அட்டைதாரர் இந்திய குடிமக்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட எந்தவொரு பதவிக்கும் அல்லது இடங்களுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

OCI அட்டைதாரர்கள் விவசாய நிலம் அல்லது பண்ணை வீடு அல்லது தோட்ட சொத்துக்களைத் தவிர வேறு அசையா சொத்துக்களை வாங்கலாம் என்றும்  மருத்துவர், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் போன்ற தொழில்களில் அவர்கள் இந்தியாவில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் என்றும் அரசு அறிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now