ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம்கோரி வந்தநிலையில், தற்போது நவுறு மற்றும் பப்புவா நியூகினியில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு அகதிக்கும் ஆண்டொன்றுக்கு சுமார் 5 லட்சத்து 73 ஆயிரம் டொலர்கள் செலவிடப்படுவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்தநிலை தொடருமானால், அடுத்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அகதிகளை கடல்கடந்து தங்கவைத்திருக்கும் செயற்பாட்டிற்கு சுமார் 1.2 பில்லியன் டொலர் மக்கள் வரிப்பணம் செலவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Asylum Seeker Resource Centre, Save the Children, GetUp ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடல்கடந்து வாழ்ந்துவரும் 535 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை அடிப்படையாக வைத்து மேற்குறிப்பிட்ட அமைப்புகள் இக்கணிப்பினை மேற்கொண்டுள்ளன.
இவ்வளவு பாரிய செலவில் அகதிகளை கடல்கடந்து தங்கவைக்கின்றபோதும், அவர்கள் அங்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள இப்புதிய அறிக்கை. அகதிகள் நலன்கருதியும் நாட்டின் நிதிநிலைமையைக் கருத்திற்கொண்டும், அரசு வெகுவிரைவில் அகதிகள் விடயத்திற்கு ஒரு தீர்வினைக் காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் குறித்த அகதிகளை ஆஸ்திரேலியாவில் தங்கவைத்தால், தற்போது செலவிடப்படும் தொகையைவிட மிகக்குறைந்தளவே செலவாகும் எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
Asylum Seeker Resource Centre, Save the Children, GetUp ஆகிய அமைப்புகள் இவ்வறிக்கையை தயாரித்தபோது 535 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கடல்கடந்து தங்கவைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அங்கு 466 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
