நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களை அங்கீகரிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக நடைபெறும் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பில், கடந்த வெள்ளிக்கிழமை வரை 10.8 மில்லியன் பேர், அதாவது மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் பங்கெடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது நாட்டில் வாக்களிக்கத் தகுதியானவர்களில் 67.5 சதவீதமாகும்.
குறித்த அஞ்சல் வழி வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி முடிவடையவுள்ளதால், இதுவரை தமது வாக்குச்சீட்டுகளை சமர்ப்பிக்காதவர்கள் அதனை தமக்கு அனுப்பிவைக்குமாறு புள்ளிவிபரவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களை அங்கீகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மக்கள் என்ன கருதுகிறார்கள் என்ற முடிவு நவம்பர் 15ம் திகதி காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும்.
