நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கருத்து வாக்கெடுப்பில் 'ஆம்' என்ற தரப்பு தோல்வியடையும் என கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று சொல்கின்றது.
Twitter-இல் பதிவு செய்யப்படும் கருத்துக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்படி, ஓரே பாலின திருமணங்களுக்கு ஆதரவாக 49 வீதமான வாக்குகளே கிடைக்கும் என்பதால் 'இல்லை' என்ற தரப்புக்கே வெற்றி கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என தமது ஆய்வின் முடிவில் மிகச்சரியாக கணித்திருந்ததாகவும், அதேபோன்றே இம்முடிவினையும் தாம் வெளியிட்டிருப்பதாக குறித்த ஆய்வினை மேற்கொண்ட Griffith பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களை அங்கீகரிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக நடைபெறும் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பில், 12.3 மில்லியன் பேர் பங்கெடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது நாட்டில் வாக்களிக்கத் தகுதியானவர்களில் 77 சதவீதமாகும்.
கடந்த வாரம் மட்டும், சுமார் 4 லட்சம் படிவங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள புள்ளிவிபரவியல் திணைக்களம், 16 மில்லியன் படிவங்களைத் தாம் நாடு முழுவதும் விநியோகித்திருந்ததாக தெரிவித்துள்ளது.
குறித்த அஞ்சல் வழி வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி முடிவடையவுள்ளதால், இதுவரை தமது வாக்குச்சீட்டுகளை சமர்ப்பிக்காதவர்கள் அதனை விரைவாக தமக்கு அனுப்பிவைக்குமாறு புள்ளிவிபரவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களை அங்கீகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மக்கள் என்ன கருதுகிறார்கள் என்ற முடிவு நவம்பர் 15ம் திகதி காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும்.
