நாட்டில் ஒரேபாலின திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பில் நாடாளுமன்றின் கீழவையில் இடம்பெற்ற விவாதத்தின் முடிவில் இச்சட்டமுன்வடிவு வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டரீதியாக திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
முன்னதாக நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பில், 61.6 வீதமானவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து கிறிஸ்மசுக்கு முன்பாக இதனைச் சட்டமாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென பிரதமர் Malcolm Turnbull அறிவித்திருந்ததற்கிணங்க, முதலில் செனற் அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டமுன்வடிவு, சற்றுமுன்னர் மக்கள் பிரதிநிதிகள் அவையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சட்டமுன்வடிவில் சமய விழுமியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், எவ்வித மேலதிக மாற்றங்களும் செய்யப்படாமல், செனற் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்திலேயே மக்கள் பிரதிகள் அவையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
