பல்வேறு அழுத்தங்களின் பிரகாரம் நவுறு தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பல அகதி குடும்பங்களை கொண்டுவருகின்ற ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை ஒரேநாளில் 11 சிறுவர்கள் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 29 சிறுவர்கள் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ள அதேநேரம் இன்னமும் 52 சிறுவர்கள் நவுறுவில் உள்ளதாக உள்துறை அமைச்சு செனட் விசாரணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா வருவதற்காக நவுறு அகதிகள் தாக்கல் செய்யும் நீதிமன்ற வழக்குகளை எதிர்த்துப் போராடுவதற்காக, கடந்த 3 மாதங்களில் சுமார் அரை மில்லியன் டொலர்களை உள்துறை அமைச்சு செலவிட்டிருப்பதாகவும் செனட் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் விவகாரம் தொடர்பாக - குறிப்பாக நவுறு அகதிகள் தொடர்பாக, தனது கட்சிக்குள்ளேயே மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள பிரதமர் Scott Morrison இதற்கு விரைவாக முடிவொன்றை எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இதன் ஒரு கட்டமாக நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விசா கட்டுப்பாடின்றி வந்துபோக முடியும் என்ற நிலையை மாற்றி, அகதிகளாக அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி சட்டமாற்றம் கொண்டுவரப்பட்டால், வருடமொன்றுக்கு 150 நவுறு மற்றும் மனுஸிலுள்ள அகதிகளை உள்வாங்கத் தயார் என்ற நியூசிலாந்தின் சலுகையை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
