ஆஸ்திரேலிய அரசின் உதவியுடன் FLEA எனப்படும் வெளிநாட்டு சட்ட அமலாக்க அமைப்பினர் கடந்த 14 மாதங்களில் 10 படகுப் பயணங்களை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் இதன்மூலம் சுமார் 300 புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தே இப்படகுப்பயணங்கள் இடம்பெறவிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரொனி அபெட்டின் ஆட்சிக்காலத்தின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளின் ஒரு அங்கமாக FLEA உருவாக்கப்பட்டிருந்தது.
இதுதவிர ஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்பில் கடந்த 2013 செப்டம்பர் முதல் 614 கைதுக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 489 இலங்கையிலும் ஏனையவை மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நேசநாடுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 78 ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சுமார் 2,525 பேர் ஆஸ்திரேலியாவுக்கு படகுப்பயணம் மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
