விக்டோரியாவிலுள்ள பழப்பண்ணைகளில் பணிபுரியவென பசுபிக் பிராந்தியங்களிலிருந்து முதல்தொகுதி பணியாளர்கள் வந்தடைந்துள்ளனர்.
விக்டோரியா மற்றும் டஸ்மேனியா அரசுகளுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, டஸ்மேனியாவில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த சுமார் 200 பணியாளர்கள் நேற்றுமுதல் விக்டோரியாவின் Yarra Valley, Gippsland, Sunraysia உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிய ஆரம்பித்துள்ளனர்.
மொத்தமாக சுமார் 1500 வரையிலான பணியாளர்கள் இவ்வாறு பழப்பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் ஏனையோர் அடுத்தடுத்த வாரங்களில் விக்டோரியா வரவுள்ளதாகவும் மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் Mary-Anne Thomas தெரிவித்ததுள்ளார்.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வரும் பணியாளர்களின் தனிமைப்படுத்தல் செலவுகளுக்கென மாநில அரசு 7.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள அதேநேரம் ஒரு பணியாளருக்கு 2000 டொலர்கள் என்ற அடிப்படையில் விவசாயத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
எனினும் 1500 பணியாளர்கள் விக்டோரியாவின் பரந்துபட்ட விவசாய நிலங்களில் பணிபுரிய போதாது எனவும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் விவசாயத்துறையும் அரசும் சிந்தித்துப்பார்க்க வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
