நாட்டில் bridging விசாவுடன் வாழ்ந்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த முக்கிய கொடுப்பனவு கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இம்முடிவை மீளப்பெறுமாறு விக்டோரியா மாநில மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன்படி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான SRSS எனப்படும் Status resolution support services கொடுப்பனவு கடந்த ஜுன் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
SRSS கொடுப்பனவு ஊடாக ஒரு நாளைக்கு சுமார் 35 டொலர்கள் பணமும் case management உதவிகளும் உளவள உதவிகளும் வழங்கப்பட்டன.
இவ்வுதவிகளை அரசு நிறுத்துவதால் நாடுமுழுவதும் உள்ள சுமார் 4000 சிறுவர்கள் உட்பட பல புகலிடக்கோரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அரசு இம்முடிவினை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தி, விக்டோரியா மாநிலத்தின் 17 கவுன்சில்களைச் சேர்ந்த மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டு தீர்மான வரைபு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மெல்பேர்னின் டண்டினோங் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தின் முடிவில் இத்தீர்மான வரைபு வெளியிடப்பட்டது.
