விக்டோரியா மாநிலத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்கென சுமார் 6 லட்சம் டொலர் நிதியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட சுமார் 400 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நிதியுதவி மற்றும் தங்குமிட வசதிகளை அண்மையில் அரசு நிறுத்தியிருந்தது.
மேலும் இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கான ஆயத்தவேலைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இந்தநிலையில் குறித்த 400 பேரில் விக்டோரியாவில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் ஏனைய வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கென 6 லட்சம் டொலர் நிதியை தமது அரசு ஒதுக்கியுள்ளதாக விக்டோரியா மாநில முதல்வர் Daniel Andrews அறிவித்துள்ளார்.
இவர்கள் தமது தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும்வரை வாழ்வதற்கு என்ன செய்வார்கள் என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு கவலைப்படவில்லை எனத் தெரிவித்த Daniel Andrews, ஆனால் தம்மால் அவ்வாறு இருக்க முடியாது எனக் கூறினார்.
இதேவேளை ஆஸ்திரேலிய அரசால் நிதியுதவி நிறுத்தப்பட்ட 400 புகலிடக்கோரிக்கையாளர்களும் இன்னும் 6 மாதங்களில் தமது தாய்நாட்டுக்குத் திரும்புமாறு நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
