மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களில் உண்மையான அகதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 560 பேர் பப்புவா நியூ கினியில் குடியமர்வதற்கு மறுத்துவிட்ட நிலையில், அவர்களைக் குடியமர்த்துவதில் சர்வதேச உதவி தேவைப்படுவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
குறித்த 560 பேரும் பப்புவா நியூ கினியில் தமக்கான பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், இவர்களைக் குடியமர்த்துவதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியைத் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் உதவி தேவைப்படுவதாகவும் பப்புவா நியூ கினியின் வெளிவிவகார அமைச்சர் Rimbink Pato கடந்த வாரம் ஐ.நா சபைக்கு தெரிவித்திருந்தார்.
சுமார் 3 வருட பரிசீலனையின் பின்னர் இதுவரை உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்ட 24 பேர் மாத்திரமே பப்புவா நியூ கினியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் என ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க மனுஸ் தடுப்பு முகாமிலுள்ளவர்களில் உண்மையான அகதிகள் என இனங்காணப்படாதவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்குள் ஆரம்பமாகலாம் என The Guardian தெரிவித்துள்ளது.
