மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், தமக்கு வழங்கப்படும் இலவச சிகரெட் பாக்கெட்டுகளை அங்குள்ள கறுப்புச் சந்தைகளில் விற்று, அதில் வரும் பணத்தில் marijuana, மதுபானம், கைபேசிகள், தொலைக்காட்சி போன்றவற்றை வாங்குவதாக NewsCorp Australia செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சிலர் அந்தப் பணத்தை விலைமாதர்களுக்கென செலவிடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டும் 10 டொலர்களுக்கு விற்கப்படுவதாகவும், சிலர் 40 பாக்கெட்டுகள் வரை விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இந்த கறுப்புச் சந்தை வர்த்தகம் அதிகளவில் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வெளியில் செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களின் சில நடவடிக்கைகளால் உள்ளூர்வாசிகள் அதிருப்தியடைந்துள்ளதாகவும், இதனால் இரு தரப்பினருக்குமிடையிலான முறுகல்கள் எந்நேரமும் விஸ்வரூபம் எடுக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் காலவரையற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மில் பலர் துக்கத்தை மறப்பதற்காக மதுபானம் அருந்துவதுடன் marijuana-வைப் புகைத்து விட்டு தூக்க மாத்திரையை உட்கொண்டு நித்திரைக்குச் செல்வதாக அங்குள்ள ஈரான் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் அரசு உடனடியாக தமக்கான தீர்வினை முன்வைக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள பலர் தம்மை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புமாறு கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
