இலங்கை, யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாக் கொண்ட ஊடகவியலாளரும் குறும்பட இயக்குனருமான அஸ்வின் சுதர்சன் உக்ரெய்னில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டூனிஸ்டாக தன்னுடைய ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின் அதன் பின்னர் பத்தி எழுத்திற்காகவும் புகழ்பெற்றார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல ஊடகங்களில் பணியாற்றிய அஸ்வின் யாழ்ப்பாணத்தில் மிகவும் நெருக்கடியான காலங்களில் துணிச்சலாக செயற்பட்டவர் என்பதோடு தனது கேலிச்சித்திரங்கள் மூலம் பல காத்திரமான செய்திகளை வெளிப்படுத்தியவர் எனவும் புகழப்படுகிறார்.
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு எப்போது என்ற ஆவணப்படம் மூலமும் கண்ணே என் கண்ணே என்ற குறும்படத்தின் மூலமும் பலரது கவனத்தை அஸ்வின் ஈர்த்திருந்தார்.
இந்த நிலையில் அஸ்வின் மேற்கு நாடொன்றில் புகலிடம் கோர விரும்புவதாக தமது நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் இவ்வாறு புகலிடம் தேடிச்சென்றவேளை உக்ரெய்ன் நாட்டில் வைத்து அவர் திடீர் மரணமடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. ஒவ்வாமை காரணமாக இவர் மரணமடைந்ததாக குறிப்பிடப்படுகின்றபோதிலும் இதனை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
