விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசிய அரசியல்வாதிகள் இருவர் உட்பட ஏழுபேரை மலேசிய பொலீஸார் கைது செய்துள்ளதாக Channelnewsasia செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மலேசிய அரசியல்வாதிகளான ஜி. சாமிநாதன் மற்றும் பி. குணசேகரன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவரின் தலைமையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த இந்த ஏழுபேர் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் முதல் தாங்கள் அவதானித்து வந்ததாகவும், கைது செய்யப்பட்ட ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை இராஜதந்திரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் Ayob Khan Mydin Pitchay குறிப்பிட்டார்.
மேற்படி ஏழுபேரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் ஆட் சேர்த்தாகவும் பணம் சேர்த்ததாகவும் அந்த அமைப்பு தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டபட்டுள்ளனர்.
'விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்கு இலங்கைக்கு வெளியில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறிகிறோம். அது நிச்சயமாக மலேசியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் அது தொடர்பில் மலேசியாவின் பெயர் வந்துவிடக்கூடாது என்ற என்ற அவதானத்துடன் முன்னாயத்தமாக இந்த கைதினை மேற்கொண்டிருக்கிறோம்'என்று மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை 2014ம் ஆண்டு முதல் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் மலேசியா இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
