விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மேலும் ஐந்து பேரை மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவான E8 கைது செய்துள்ளது. இரண்டு சந்தேகநபர்கள் மலாக்கா பிரதேசத்திலும் இருவர் பெனாங் பகுதியிலும் ஒருவர் செலங்கூரிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட ஐவரும் கைதுசெய்யப்பட்ட அந்தந்த பிரதேசங்களில் E8 பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்கள் என்றும் இந்த கைதுகள் தொடர்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை பொலீஸார் ஊடக சந்திப்பொன்றை நடத்துவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கடந்த வியாழக்கிழமை ஏழுபேர் இதேபோன்று மலேசிய பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்தவருடம் கைது செய்யப்பட்ட 25 பேர் தற்போது மலேசிய பொலீஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்கள் என்று மலேசிய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப்புலிகள் அமைப்பினை பலஸ்தீன அமைப்புக்கு ஈடாக ஒப்பிட்டு அதற்கான ஆதரவை வழங்கிவருகின்றதொரு போக்கு பல மட்டங்களிலும் இடம்பெற்றுவருவது தமக்கு தெரியும் என்றும் ஆனால், மலேசியாவில் சட்டவிரோதமான வகையில் நடைபெறும் எந்த நடவடிக்கையையும் மலேசிய பொலீஸார் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அதன் அடிப்படையிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றிருக்கிறது என்றும் E8 தலைவர் Ayob Khan Mydin Pitchay தெரிவித்திருக்கிறார்.
