மேற்கு ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிகளுடன் நல்லிணக்கத்தை பேணும் ஒரு முயற்சியாக சகல பொலீஸ் நிலையங்களின் முன்றலிலும் பூர்வகுடிமக்களின் கொடியை நிரந்தரமாக பறக்கவிடுவதற்கு அந்த மாநில பொலீஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிமக்களுக்கும் பொலீஸாருக்கும் இடையில் காணப்படும் இடைவெளியை குறைப்பதற்கும் பூர்வகுடி மக்களுடன் நல்லிணக்கத்தை பேணுவதற்கும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக கடந்த செவ்வாயன்று விடுத்த பொலீஸ் திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க முயற்சியின் இன்னொரு அங்கமாக பூர்வகுடி சமூகத்திலிருந்து கூடுதலானவர்களை பொலீஸ் சேவையில் உள்வாங்குவதற்கும் பொலீஸ் திணைக்களம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு அஸ்திரேலியாவில் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட பூர்வகுடிகளிடம் மன்னிப்புக்கோருவதாக மேற்கு ஆஸ்திரேலிய பொலீஸ் ஆணையாளர் பத்து மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் தாங்கள் தொடர்ச்சியாக நல்லிணக்க நடவடிக்கைகளில் கரிசனை கொண்டவர்கள் என்பதை வெளிக்காட்டும் முகமாக மேற்கண்ட செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாக பொலீஸ் திணைக்களம் கூறியுள்ளது.
ஏனைய மாநிலங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களிலும் இரண்டு கொடிக்கம்பங்கள் இருந்தால் பூர்வகுடிகளின் கொடியையும் நிரந்தரமாக பறக்கவிடலாம் என்ற விதிமுறையுள்ளபோதும் பெரும்பாலான பொலீஸ் நிலையங்கள் ஒரு கம்பத்தில் ஆஸ்திரேலிய கொடியை மாத்திரமே பறக்கவிட்டிருப்பது வழக்கம்.
அடுத்த வருடம் முதல் திறக்கப்படவுள்ள புதிய பொலீஸ் நிலையங்களில் போதிய கொடிக்கம்பங்கள் நாட்டப்பட்டு அதில் Aboriginal and Torres Strait Islander கொடிகளை நிரந்தரமாக பறக்கவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
