பிரித்தானியாவில் புகலிடம் கோரிய சுகந்தன் என்ற நபர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக The Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.
1999ம் ஆண்டு தனது 14வது வயதில் புகலிடம் கோரி பிரித்தானியா சென்ற சுகந்தனின் தஞ்சக் கோரிக்கை 2003ம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட அதேநேரம் அவரது மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்ட சுகந்தனை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி அங்குள்ள தமிழர்கள் பலர் போராட்டம் நடத்தியதுடன் கையெழுத்து மனுக்களையும் தாக்கல் செய்திருந்ததாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

அத்துடன் Liberal Democrat கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Stephen Williams இன் தலையீட்டினையடுத்து இவர் பிணையில் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக அச்செய்தி மேலும் குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில் 2014ம் ஆண்டு நண்பர்களுடன் தங்கியிருந்த காலப்பகுதியில் 21 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சுகந்தன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இவருக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும் எனவும் The Telegraph வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.
