குயின்ஸ்லாந்து Rockhampton பகுதியில் மூன்று பெண் நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழ் மருத்துவர் இளமுருகன் ஆறுமுகம் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் ஆறுமுகம் தகாதமுறையில் தமது மார்பகங்களை தொட்டார் என குறித்த மூன்று பெண்களும் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டினை முற்றாக மறுத்த குறிப்பிட்ட மருத்துவர் - முறைப்பாடு மேற்கொண்ட பெண்களை தவறான முறையில் தொடவில்லை என்றும் மருத்துவ பரிசோதனைகளை மாத்திரமே தான் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தோல் புற்றுநோய் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஆறுமுகம் மீது கடந்த 2012ம் ஆண்டு 5 பிரிவுகளின் கீழ் இப்பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த பின்னணியில் குறித்த மருத்துவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பில் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மருத்துவர் ஆறுமுகம்- 7 ஆண்டுகளாக தான் கடும் மன உளைச்சலை அனுபவித்திருந்ததாகவும், தற்போது தனக்கு நீதி கிடைத்துவிட்டது என்றும் கூறினார்.
அதேநேரம் மருத்துவருக்குச் சார்பான இத்தீர்ப்பு தமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்த பெண்கள் மருத்துவ பரிசோதனையை தவறாக புரிந்துகொண்டமையே இதற்கான காரணம் எனவும் மருத்துவரின் சட்டத்தரணி தெரிவித்தார்.
