ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சேர்பியாவின் முன்னாள் ஒட்டுக்குழு தலைவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் 25 வருடங்களுக்கு முன்னர் குரேஷியாவில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சேர்பிய நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி குரேஷியாவின் Škabrnja பகுதியில் சுமர்ர 30 அப்பாவிப்பொதுமக்களை படுகொலை செய்த சேர்பியாவின் ஒட்டுக்குழுத்தலைவராக செயற்பட்டிருந்தார் என்று கடந்த மாதம் சேர்பியாவின் போர்க்குற்ற விசாரணைக்குழு Zoran Tadic என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் உயிர் தப்பி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவர் கூறும்போது - குறிப்பிட்ட சம்பவத்தில் பல வயதான முதியவர்கள் கழுத்து வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப்பின்னணியில் தற்போது சிட்னியில் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் 59 வயதான Zoran Tadic ஆஸ்திரேலிய குடியுரிமைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து கன்பராவிலுள்ள குரேஷிய தூதரகம் எந்த கருத்தும் வெளியிடவில்லை.
சில ஊடகங்கள் இவரது வீட்டுக்கு சென்றபோது அவ்வாறான ஒரு பெயரில் அங்கு யாருமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய - குரேஷிய புத்திஜீவி ஒருவர் இந்த செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்தபோது - இப்படியான ஒரு பேரர்க்குற்றவாளியை ஆஸ்திரேலிய அரசு தொண்ணூறுகளில் எவ்வாறு இந்த நாட்டுக்குள் அனுமதித்தது என்பதை எண்ணும்போது அதிர்ச்சியாக உள்ளது என்றும் இப்படிப்பட்ட நபர் இன்றைக்கும் எமது தெருவில் சாவகாசமாக திரிகிறார் என்று எண்ணும்போது ஆச்சரியமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
