நாட்டில் பெரு வணிக நிறுவனங்களுக்கான வரிக்குறைப்பு குறித்த சட்டமுன்வடிவுக்கு செனற் அவையில் ஒப்புதல் கிடைக்காததையடுத்து, அத்திட்டத்தைக் கைவிடுவதாக பிரதமர் Malcolm Turnbull அறிவித்துள்ளார்.
பெரு வணிக நிறுவனங்களுக்கான வரியை 30 வீதத்திலிருந்து 25 வீதமாக குறைப்பது குறித்த சட்டமுன்வடிவு ஏற்கனவே செனற் அவையில் தோல்வியடைந்தநிலையில், அது தற்போது மீண்டும் தோற்கடிக்கப்பட்டதையடுத்து பிரதமரின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த திட்டத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்காது விட்டால், அரசு அதனைக் கைவிடுமா என்ற எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தொடர்ச்சியாக மறுத்து வந்த பிரதமர், இன்று இவ்வறிவிப்பினை விடுத்துள்ளார்.
ஏற்கனவே National Energy Guarantee என்ற தேசிய எரிசக்தி உத்தரவாத திட்டத்திற்கு ஆளுங்கட்சி அங்கத்தவர்கள் மத்தியிலேயே பொது இணக்கப்பாட்டிற்கு வரமுடியாததையடுத்து, பிரதமரின் தலைமைத்துவப் பதவிக்கு Peter Dutton சவால்விடுத்திருந்த பின்னணியில் பிரதமர் Malcolm Turnbull இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் Peter Dutton மீண்டும் ஒரு தடவை தலைமைத்துவ சவாலை முன்வைக்கக்கூடும் என சமிக்ஞை காட்டியுள்ளநிலையில், லிபரல் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக காணப்பட்ட இவ்வரிக்குறைப்பு திட்டத்தை கைவிடுவது என்ற பிரதமரின் அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
